×

விராலிமலையில் இன்று நடக்கிறது: போட்டி நடத்த ஜல்லிக்கட்டு களம் தயார்

விராலிமலை, ஏப்.30: விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் சித்திரை திருவிழா ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை நடைபெறுகிறது. 800 காளைகள் பங்கேற்க உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் 300 மாடுபிடி வீரர்கள் களம் காண்கின்றனர். விராலிமலை அருள்மிகு மெய்க்கண்ணுடையாள் கோயில் சிறப்பு பெற்ற ஸ்தலமாகும் சுற்றுப் பகுதி கிராம மக்களின் காவல் தெய்வமாகவும் சில குடும்பங்களின் குலதெய்வமாகவும் விளங்கி வரும் மெய்க்கண்ணுடையாள் அம்மன் வடக்கு பார்த்து அமர்ந்துள்ளது இக்கோயிலின் தனி சிறப்பாகும். பல்வேறு சிறப்புகள் பெற்ற இத்லத்தில் வருடம் முழுவதும் பல்வேறு விழாக்கள் நடத்தப்படுகிறது. அதில் குறிப்பாக சித்திரை திருவிழா இக்கோயிலின் தனி சிறப்பாகும் சித்திரை மாதம் இரண்டாம் செவ்வாய்க்கிழமை பூச்சொரிதல் விழாவுடன் சித்திரை விழா தொடங்குகிறது.

அதனை தொடர்ந்து மூன்றாம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்வும், நான்காம் செவ்வாய் திருவிழாவும் நடைபெறுகிறது.இந்நிலையில் இன்று காலை (ஏப்.30) விராலிமலை-இனாம் குளத்தூர் சாலையில் உள்ள வெளியம்பூர் குளக்கரை திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு தொட ங்கும் இப்போட்டி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் 800 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர். தேர்தல் நடத்தை விதி முறைப்படி நடத்தப்படும் இப்போட்டியில் பரிசுகள் ஏதும் வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

The post விராலிமலையில் இன்று நடக்கிறது: போட்டி நடத்த ஜல்லிக்கட்டு களம் தயார் appeared first on Dinakaran.

Tags : Viralimalai ,Jallikattu field ,Viralimalai Meikkannudayal Temple Painting Festival Jallikattu ,Jallikattu ,Viralimalai Arulmiku Meikkannudayal ,temple ,Dinakaran ,
× RELATED விராலிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாக கொடியேற்றம்